டைகர்ஏர் விமானங்களில் சென்ற பயணிகள் எடுத்துச் சென்ற பெட்டி களின் எடையைக் குறைத்துக் காட்டுவதற்காக விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு $800 லஞ்சம் கொடுத்த இந்திய நாட்டவர் ஒருவருக்கு எட்டு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உணவு பதனீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கோபால் கிருஷ்ண ராஜு என்பவர், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்குத் தங்கத்தைக் கொண்டு சென்று இந்தியாவில் தங்கத்தை விற்கும் தொழிலையும் பகுதிநேரமாக பார்த்து வருகிறார்.
தன்னுடைய சார்பில் தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும் பயணிகளுடைய பெட்டிகளின் எடையைக் குறைத்துக் காட்டி உதவும்படி பட்டேல் ஹித்தேஷ்குமார் சந்துபாய் என்ற ஊழியரை கோபால் கேட்டுக்கொண்டார். இதற்காக பட்டேலுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. இந்தக் குற்றச்செயல் 10 மாதங்களாக நடந்து வந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த கோபால், 37, ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சென்ற வெள்ளிக்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
2016 ஜனவரிக்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடையில் குறைந்தபட்சம் 10 தடவை இந்தக் குற்றச்செயல்களை அவர் புரிந்துள்ளார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, சாங்கி விமான நிலையத்தின் நற்பெயரைக் காக்கவேண்டியஅவசியத்தைத் தீர்ப்பில் சுட்டினார்.
சாங்கி விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை ஊழியர் களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் ெதாடர்பில் இந்த ஆண்டு கோபாலையும் சேர்த்து நான்கு பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களில் எஞ்சிய மூவர் லஞ்சம் பெற்றவர்கள்.
பட்டேல், 37, ஜெரிசிம் கிருபாய் ராஜ் டேவிட் 35, அய்யாதுரை கருணாநிதி, 47, ஆகிய மூவரும் லஞ்சம் பெற்றவர்கள்.
இந்த மூவரில் ஜெரிசிம் கிருபாய் ராஜ், சாட்ஸ் ஆசியா-பசிபிக் ஸ்டார் நிறுவனத்தில் முன்பு வேலை பார்த்தவர். பட்டேல், அய்யாதுரை இருவரும் யுபிடிஎஸ் என்ற தளவாட போக்குவரத்து நிறுவனத்தின் ஊழியர்கள்.
இவர்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் ஏழு முதல் ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு $500 மற்றும் $800 தொகையைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்த மூவரில் ஜெரிசிம் கிருபாய் ராஜ் சிங்கப்பூரர். மற்ற இருவரும் இந்தியர்கள். ஜெரிசிம், அய்யாதுரை சம்பந்தப்பட்ட விவகாரங்கள், கோபால் விவகாரத்துடன் தொடர்புடையது அல்ல.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் பயணப் பெட்டி தொடர்பில் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சென்ற ஆண்டு ஜூலையில் தி நியூ பேப்பர் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பயணிகள் பெட்டி எடையைக் குறைத்துக் காட்ட லஞ்சம் கொடுத்த குற்றச்செயல்கள் அம்பலமாயின.