சிங்கப்பூரின் காற்றுத்தரம் நேற்றும் ஆரோக்கியமற்ற நிலையிலேயே இருந்தது. என்றாலும் நேற்றுப் பிற்பகலில் மழை பெய்ததால் நிலைமை கொஞ்சம் மேம்பட்டது. வரும் வாரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புகைமூட்டம் அகலக்கூடும் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு-வடகிழக்கு அல்லது கிழக்கு-தென்கிழக்கில் இருந்து காற்று வீசும் என்பதால் இந்த வட்டாரத்தில் மழை பெய்யக்கூடும் என்று நேற்று தேசிய சுற்றுப்புற வாரியம் தன்னுடைய அன்றாட பருவநிலை ஆலோசனையில் தெரிவித்தது.
சுமத்ரா, கலிமந்தான் வட்டாரம் உட்பட இந்தோனீசியாவின் பல பகுதிகளில் நேற்று மழைபெய்தது. சுமத்ராவில் 60 இடங்களில் தீ நேற்று காணப்பட்டது. இந்த எண்ணிக்கை ஞாயிறு அன்று 246 ஆக இருந்தது.
24 மணி நேர காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீட்டின்படி, நேற்று நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 24 மணிநேர புகை மூட்ட அளவு 93 முதல் 108 வரை ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
இந்தக் குறியீட்டில் பூஜ்ஜியம் முதல் 50 வரை அளவு இருந்தால் காற்றுத்தரம் நல்ல நிலையில் இருப்பதாகப் பொருள்.
இந்த அளவு 51 முதல் 100 வரை இருந்தால் காற்றுத் தரம் மிதமாக இருக்கிறது என்றும் 101 முதல் 200 வரை என்றால் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.
இந்த அளவு 201 முதல் 300 வரை இருந்தால் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத் தரம் இருப்பதாகவும் அளவு 300ஐ தாண்டினால் ஆபத்து என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் அரசாங்க மருத்துவமனைகள், மானியத்துடன் கூடிய வார்டுகளின் சன்னல்களை மூடிவிட்டு நோயாளிகளுக்கு காற்றோட்ட வசதி சாதனங்கள் மூலம் தூய காற்று கிடைக்க வசதி செய்து இருக்கின்றன. அவை தங்கள் நோயாளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.