மிகக் குறுகிய நேரத்தில் தமிழில் தட்டச்சு செய்து, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து விட்டார் திருமதி சந்திரசேகரன் மோகனப்பிரியா, 36.
உலகம் அதிவேகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு வரும் அதே சமயத்தில், தமிழ்மொழிக் கற்றலையும் வளர்ப்பதற்கு ஊக்குவித்தது ‘தமிழில் தட்டிப்பார்’ எனும் நிகழ்ச்சி ஒன்று.
சுமார் 800 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், பல்வேறு வயதினருக்கும் திறன்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வதற்குப் பயிற்சி அளித்ததுடன், குறுகிய நேரத்தில் அவர்கள் தமிழில் தட்டச்சு செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
ஒரே நேரத்தில் பலர் ஒன்றுகூடி தமிழில் தட்டச்சு செய்வது, ‘ஆக வேகமாகத் தமிழில் தட்டச்சு செய்தவர்’ என்ற இரு சாதனைகளை அடைவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
அந்த வகையில், ‘ஆக வேகமாகத் தமிழில் தட்டச்சு செய்தவர்’ எனும் பிரிவில் இலக்கிய சொற்கள் கொண்ட பனுவல் ஒன்றை 1 நிமிடம் 31 வினாடிகளில் தமிழில் தட்டச்சு செய்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் தமது பெயரைப் பதித்தார் திருமதி மோகனப்பிரியா.
“நான் வென்றது எதிர்பாராத ஒன்றுதான் என சொல்வேன். இது சற்று வித்தியாசமான நிகழ்ச்சியாக இருந்ததால் இங்கு வந்தேன். ஆனால், வேகமாக தட்டச்சு செய்யும் சவாலைக் கொடுத்தவுடன் என்னை அறியாமலேயே நான் அதில் மூழ்கிவிட்டேன்.
“குறுகிய நேரத்தில் எல்லா சொற்களையும் சரியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. மீண்டும் மிண்டும் பேசி, எழுதிப் பார்க்கும்போதுதான் தமிழ் புழக்கம் நம்மிடையே அதிகரிக்கும் என்பதை நான் உணர்ந்தேன்.
“எனது தாய்மொழியால் நான் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதை எண்ணி பெருமை அடைகிறேன்,” என்றார் இவர்.
இல்லத்தரசியான மோகனப்பிரியாவிற்கு மெல்பர்ன் சென்றுவர இரண்டு விமானச் சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இவருக்கு அடுத்த நிலைகளில், செல்வி அஷ்வினி செல்வராஜ் இரண்டாம் பரிசையும் செல்வி தியாகராஜன் காவியா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நேற்று முன்தினம் நடை
பெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டுதான் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் இங்கு வந்திருந்த குமாரி அஷ்வினி, பல திறன்களை வளர்த்துக்கொள்ள இது ஊக்குவித்ததாக கூறினார்.
“சற்று கடினமான பத்திகளைத் தமிழில் தட்டச்சு செய்தது சவால்மிக்கதாக இருந்தது.
“ஆக வேகமாக தமிழில் தட்டச்சு செய்தவர் பிரிவின் இறுதிச் சுற்றில் மூன்று நிலைகள் இருந்தன. அதே பத்தியை மூன்று முறை தட்டச்சு செய்தபோது அடுத்தடுத்த நிலைகளில் நான் குறைவான நேரம் எடுத்துக்கொண்டதை உணர்ந்தேன்.
“தமிழில் தட்டச்சு செய்வது கடினம் என்று நினைக்கும் இளையர்களுக்கு பல தளங்களின் மூலம் தமிழில் சுலபமாக தட்டச்சு செய்யலாம் என்பதை இந்நிகழ்ச்சி உணர்த்தியது,” என்று கூறினார் 21 வயது அஷ்வினி.
முதியவர், இளையர் ஆகிய பிரிவுகளிலும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
65 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், பிழையில்லாமல் ஆக வேகமாகத் தமிழில் தட்டச்சு செய்ததற்கான பரிசை வென்றார் திருமதி ஹலிமா, 65.
தொழில்நுட்பம், இளையர் களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. எல்லாரும் அதை எளிதாக பயன்
படுத்தலாம் என்பதை வலியுறுத்துவதற்கே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் ந.குணாளன் கூறினார்.