நியூயார்க்கில் உள்ள ‘அப்பீல் ஆஃப் கன்ஷியன்ஸ்’ எனும் சமய நன்னம்பிக்கை அறநிறுவனம், உலகின் மெச்சத்தக்க அரசியல் தலைவர் விருதைப் பிரதமர் லீ சியான் லூங்குக்கு வழங்கியுள்ளது.
சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தை அங்கீகரித்து பிரதமர் லீக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
உலகிலேயே சமயப் பன்மயம் ஆக அதிகமாக உள்ள நாடு சிங்கப்பூர். ஆனால், இங்கு நிலவும் நல்லிணக்கமிக்கச் சமுதாயம் எதேச்சையாக உருவாகிவிடவில்லை என்று விருது நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறினார்.
மாறாக, சமய நல்லிணக்கத்திற்கான அடிப்படைகளை நிறுவுவதற்கும், பிறகு அதனைக் கட்டிக்காப்பதற்கும் பல ஆண்டுகளாகப் பெருமுயற்சி எடுக்கப்பட்டதாக நியூயார்க்கில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரும் அரசாங்கமும் கடைப்பிடித்துவரும் இன, சமய அணுகுமுறை பற்றி அவர் பேசினார்.
“சகிப்புத்தன்மையற்ற போக்கைக் களைந்து, ஆதிக்க உணர்வை மட்டுப்படுத்தி, ஆக்ககரமான சமூக நடத்தையைத் தூண்டும் அரசமைப்பு, அரசியல், சமூக அமைப்புமுறைகளை நாங்கள் உருவாக்கினோம்,” என்று அவர் கூறினார். வெள்ளிக்கிழமை வரை நியூயார்க் நகருக்கு அவர் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார்.
எல்லா சமயங்களையும் பாரபட்சமின்றி நடத்தும் ‘சமய சார்பற்ற, ஆனால் சமயத்தை எதிர்க்காத’ அரசமைப்புச் சட்ட அணுகுமுறையையும், பல இன மக்களை ஒன்றாக வாழவும் படிக்கவும் ஊக்குவிக்கும் கொள்கைகளையும் அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமருன், முன்னாள் இந்தோனீசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோ போன்றோர் இவ்விருதை இதற்குமுன் பெற்றுள்ளனர்.