அங் மோ கியோவில் இரு பெண்களின் கைபேசிகளைத் திருடியதுடன் அவர்களை பேனாக்கத்தியால் காயப்படுத்தியதற்காக 37 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள புளோக் 532ல் இரு பெண்கள் கத்தியால் தாக்கப்பட்டதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 23) அன்று பிற்பகல் 3 மணியளவில் போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்தப் பெண்கள், அவர்களுடன் பணிபுரிவோர் ஆகியோரது ஐந்து கைபேசிகள் திருடுபோனதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
உள்சுற்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளிகளின் மூலம் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாளை நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.