ஆய்வு: நிதித் தொழில்நுட்பத் துறையில் திறனாளர்களுக்குக் கடும் பற்றாக்குறை

ஆய்வு: நிதித் தொழில்நுட்பத் துறையில் திறனாளர்களுக்குக் கடும் பற்றாக்குறை

1 mins read
effbf36f-b5f8-403a-b51d-0d58d810813f
கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூரின் நிதித் தொழில்நுட்பத் துறையில் திறனாளர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவு வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

'மைக்கல் பேச்' எனும் வேலைக்கு ஆள்சேர்க்கும் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், இத்துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக 94 விழுக்காடு நிறுவனங்கள் கூறியுள்ளன. நிதித் தொழில்நுட்பத் திறனாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக 64 விழுக்காடு முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

உயர்திறன் பெற்ற ஊழியர்கள் வேலை மாறுவதும் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, கடந்த 12 மாதங்களில் தாங்கள் வேறு வேலைக்கு மாறிவிட்டதாக ஆய்வில் பங்கெடுத்த 37 விழுக்காடு நிதித் தொழில்நுட்ப நிபுணர்கள் கூறினர்.

வேலையில் புதிய பொறுப்பை ஏற்கும்போது 12 முதல் 15 விழுக்காடு வரை சம்பள உயர்வு கிடைப்பதைத் தாங்கள் எதிர்பார்ப்பதாக 21 விழுக்காடு நிதித் தொழில்நுட்பத் திறனாளர்கள் கருத்துரைத்தனர்.

நிதித் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்க்க, கல்வி மூலம் உயர்தர, தொழில்துறைக்கு ஏற்ற திறனாளர்களை சிங்கப்பூர் உருவாக்க வேண்டும் என 'மைக்கல் பேச்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலே கந்தேல்வால் கூறினார். நிதித் தொழில்நுட்பத் துறை தொடர்ந்து வளர்வதற்கான ஆற்றல் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகளைச் சேர்ந்த 160 நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் பங்கெடுத்தனர்.

ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளது.