லிட்டில் இந்தியாவில் உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுடன் போலிசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் $47,000 ரொக்கம், கைபேசிகள், பணம் அனுப்பிய பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக நேற்று (செப்டம்பர் 24) போலிசார் தெரிவித்தனர்.
கைதான 30 முதல் 54 வயதுக்குட்பட்ட எட்டு ஆடவர்களும் போலிஸ் விசாரணையில் தற்போது உதவி வருகின்றனர்.
உரிமம் இல்லாமல் நடத்தப்படும் பணம் அனுப்பும் வர்த்தகங்கள் பண மோசடி அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி போன்றவற்றுக்குக் காரணமாக அமையக்கூடும் என போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் உரிமம் பெற்ற பணம் அனுப்பும் முகவர்கள் அல்லது வங்கிகளை நாடுமாறு அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.
ஒருவர் உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தகம் புரிவதாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $100,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அவர் தொடர்ந்து பணம் அனுப்பும் வர்த்தகம் செய்தால் அவர் அந்த வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் தலா $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.