மோசடிக் குற்றச்சாட்டுகளுக்காக போலிசாரால் விசாரிக்கப்பட்டுவந்த காலத்தில், கும்பல் ஒன்றிடம் தன்னை மலேசியாவுக்குக் கடத்துமாறு கோரிய கோ சுன் கியட்டுக்கு நேற்று (செப்டம்பர் 24) 11 ஆண்டு மற்றும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
27 பேரை ஏமாற்றி $600,000 மோசடி செய்ததாக 41 வயது கோ மீது குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூரில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்த மலேசியர்ஒருவரை அணுகி, தாம் சிங்கப்பூரிலிருந்து தப்பிக்க ஏதுவாக, தம்மைக் கடத்தும்படி கோரிய கோவை, அந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் ஜோகூர் பாருவில் கடத்தினர்.
அதனை அடுத்து நடத்திய ஆள்கடத்தல் நாடகத்தில் கோவின் தந்தையிடமிருந்து $80,000 ரொக்கத்தை அந்தக் கும்பல் கறந்தது.
அந்தக் கும்பலிடமிருந்து கோ தப்பிய விவரம் எதையும் நீதிமன்றம் வெளியிடவில்லை. ஆனால், மலேசிய போலிசாரின் உதவியுடன் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட கோ, போதைப்பொருள் உட்கொண்ட ஒரு குற்றச்சாட்டு, ஒரு குடிநுழைவுக் குற்றச்சாட்டு, வேறு இரண்டு குற்றச்சாட்டுகள், 15 மோசடிக் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது வேறு 123 குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கருத்தில் கொண்டதாகக் கூறப்பட்டது.