இந்தியாவின் சுதந்திரத்திற்காக வன்முறையில்லாமல் போராடிய மகாத்மா காந்தியைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், காந்திக்குப் புகழாரம் சூட்டினார். அக்டோபர் 2ஆம் தேதி பிறந்த காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காந்தி 1948ஆம் ஆண்டு காலமான பிறகு, அவரது உடல் எரிக்கப்பட்டது. அந்த அஸ்தியின் ஒரு பகுதி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு, சிங்கப்பூரின் தென் கடலோரத்திலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கரைக்கப்பட்டது. சிங்கப்பூரில் காந்தியைக் கௌரவிக்கும் மற்ற இடங்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ, ரேஸ் கோர்ஸ் லேனில் அமைந்துள்ள இந்தி சங்கத் தலைமையகத்தில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தை உதாரணமாகக் கூறினார்.
“இந்த நினைவுச்சின்னங்களுக்கு அப்பால், காந்தியின் யோசனைகளும் கொள்கைகளும் சிங்கப்பூரில் பரவலாக நீடித்துள்ளன,” என்றார் பிரதமர் லீ.
“காந்தியின் கருத்துகளை நாம் மனதில் பதிய வைத்தால், வேறுபாடுகளுக்கு அமைதியாகவும் நிதானமாகவும் தீர்வுகாண இயன்றளவு முயற்சி எடுக்கவேண்டும். உணர்வுகளைத் தூண்டவோ அல்லது மனப்போக்குகளை இறுக்கமாக்கவோ கூடாது. இதன்வழி, ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வையும், சகிப்புத்தன்மையையும், மரியாதையையும் வளர்க்கமுடியும்,” என்றார் அவர்.
ஒவ்வொருவரும் அடிப்படையில் சமமானவர்களே என்ற காந்தியின் நம்பிக்கையையும் சிங்கப்பூர் சீர்தூக்கி கட்டிக்காத்து வருவதாகவும் அவர் சொன்னார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், பங்ளாதேஷ் பிரதமர் திருவாட்டி ஷேக் ஹசினா, ஜமைக்கா பிரதமர் அன்ட்ரூ ஹொல்னஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ஆகியோரும் காந்திக்குப் புகழாரம் சூட்டினார்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்தில் காந்தி சூரியசக்தி பூங்காவையும், நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் காந்தி அமைதித் தோட்டத்தையும் திறந்து வைத்ததோடு, காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஐநா அஞ்சல்தலைகளையும் வெளியிட்டனர்.