தனது ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய துப்புரவு மற்றும் பசுமைவனப்பு நிறுவனத்துக்கு நேற்று (செப்டம்பர் 24) $190,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு மரத்தை வெட்டும் வேலையைத் தனது வெளிநாட்டு ஊழியரான சின்னையா கணேசனிடம் செய்ய சொன்ன சின் எங் கிளீனிங் சர்வீசஸ், ஊழியருக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மரத்தின் ஒரு பகுதியை வெட்டுவதற்கு சங்கிலிரம்பத்தை சின்னையா பயன்படுத்தினார். அப்போது வெட்டப்பட்ட மரத்தின் பகுதி அவர் மீது விழுந்தது.
மரத்திலிருந்து அவர் கீழ் நோக்கி விழுந்தாலும் அவர் அணிந்திருந்த பாதுகாப்பு வார் ஒரு பொருளில் மாட்டிக் கொண்டதால் சின்னையா அந்தரத்தில், தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து சின்னையா கீழே இறக்கப்பட்டார். ஆனால், அவரது நெஞ்சுப் பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் ஏற்பட்ட காயங்களால் அவர் மாலை 4.20 மணிக்கு மரணமடைந்தார்.
புக்கிட் தீமாவில் உள்ள 62 கியாம் ஹோக் ரோட்டில் உள்ள காலி இடத்தில் இருந்த ஆறு மரங்களை வெட்டும் பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அங்குதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
செய்யும் வேலையில் எந்த வகையான அபாயங்கள் நிகழக்கூடும் என்று ஆராயாமலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமலும் சின் எங் நிறுவனம் ஊழியர்களை வேலை செய்ய அனுமதித்தது மனிதவளச் சட்டத்தின்படி அது இழைத்த குற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.