சிங்கப்பூரின் மக்கள்தொகை 5.7 மில்லியனுக்கு மேல் ஆகியுள்ளதாக இன்று (செப்டம்பர் 25) வெளியான வருடாந்தர மக்கள்தொகை அறிக்கை தெரிவிக்கிறது.
புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களாலும் பிறப்பு விகிதத்தாலும் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மக்கள்தொகை சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம்வரை 1.2%, அதாவது கிட்டத்தட்ட 65,000 அதிகரித்துள்ளது.
இது அதற்கும் முந்தைய ஓராண்டு காலத்தைக் காட்டிலும் இருமடங்குக்கும் அதிகம். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான அதிகரிப்பு 0.5 விழுக்காடு என்று பதிவாகியிருந்தது.
குறிப்பாக, சிங்கப்பூரர்களின் மக்கள்தொகை 0.8 விழுக்காடு அதிகரித்து, 3.5 மில்லியனில் உள்ளது. சென்ற ஆண்டு மட்டும் புதிதாகக் குடியுரிமை பெற்றவர்கள் 22,550.
இதே ஓராண்டுக் காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2 விழுக்காடு அதிகரித்து 1.68 மில்லியனை எட்டியுள்ளது. குறிப்பாகச் சேவை, கட்டுமானத் துறைகளில் வேலை அனுமதிச் சீட்டு பெற்றுப் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
இந்நிலையில் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம்வரை பதிவான தகவலின்படி தொடர்ந்து 530,000ல் இருந்து வருகிறது.
இதற்கிடையே நாட்டில் மூப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 16 விழுக்காட்டினர், 65 வயது, அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர்.
சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. 2017ஆம் ஆண்டில் 24,417 திருமணங்கள் நடைபெற்றன. சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 1% குறைந்து 23,632 திருமணங்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுவே ஆகக் குறைவான எண்ணிக்கையாகும்.
சிங்கப்பூரர்களின் பிறப்பு விகிதம் 2017ஆம் ஆண்டின் 32,356 லிருந்து சற்று அதிகரித்து சென்ற ஆண்டு 32,413 ஆனது. ஆனால், மொத்த பிறப்பு விகிதம் 1.16லிருந்து 1.14 ஆகச் சரிந்தது.