கடந்த சனிக்கிழமை பிடோக்கில் நிகழ்ந்த மின்-ஸ்கூட்டர் விபத்தில் காயமடைந்த 65 வயது மாது புதன்கிழமை (செப்டம்பர் 25) மருத்துவமனையில் மரணமடைந்தார்.
திருவாட்டி ஓங் பீ எங் மரணமடைந்ததை போலிசார் உறுதிப்படுத்தினர். செப்டம்பர் 21ஆம் தேதி அந்த விபத்து நடந்த பிறகு 20 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
எச்சரிக்கையற்ற செயலால் மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவமாக இதனை விசாரிப்பதாக போலிசார் தெரிவித்தனர்.
தளவாடப் பொட்டலமடிப்பு உதவியாளராகப் பணிபுரிந்த திருவாட்டி ஓங், தனது மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது மின்-ஸ்கூட்டரின் மோதினார்.
இவ்விபத்தில் காயமடைந்த அவர், சாங்கி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா மயக்கநிலையில் இருந்தார்.
கணவரை இழந்த அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
அவர் அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவர் என்றும், அனைவராலும் மதிக்கப்பட்டவர் என்றும் நண்பர்களும் குடும்பத்தினரும் கூறினர்.