அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள ஒரு ஷெல் பெட்ரோல் நிலையத்தில் ஆயுதத்தைக் காட்டி கொள்ளையடித்த குற்றத்திற்காக 50 வயதான விஸ்வநாதன் வடிவேலுவிற்கு பதினொன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி அவர் இந்தக் குற்றச்செயலை அரங்கேற்றினார்.
போதைப்பொருள் எடுத்துக்கொண்டது தொடர்பிலான இரு குற்றச்சாட்டுகளையும் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் இவர் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற விசாரணையின்போது இடைவேளை நேரத்தில் இவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாதன் சார்பில் அவரே வாதாடினார். தனக்கு மனநிலை சரியில்லை என்றும் வீட்டிற்குச் செல்லும்படி தனக்குள்ளேயே குரல் கேட்டதால் கடந்த 17ஆம் தேதி நீதிமன்றத்திலிருந்து தப்பியோடினேன் என்றும் நீதிபதியிடம் இவர் சொன்னார்.
விஸ்வநாதன் தப்பி வந்தது குறித்து அவருடைய தாயார் போலிசுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். பின் மீண்டும் கடந்த 19ஆம் தேதி இவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தன்னை மனநலக் கழகத்திற்கு அனுப்புவதை தண்டனையாக விதிக்குமாறு நீதிபதி கான் ஷுக் வாங்கிடம் இவர் கேட்டுக்கொண்டார். ஆனால், மனநலக் கழகத்திற்கு அனுப்புவது என்பது தண்டனையாகாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
குற்றம் நிகழ்ந்த சமயத்தில் விஸ்வநாதன் வேலையின்றி இருந்ததாகவும் அதனால் பணத் தேவைக்காக பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையடித்ததாகவும் கூறப்பட்டது.
அன்று நண்பகல் நேரத்தில் அப்பர் புக்கிட் தீமா ரோட்டிற்குத் தனது மோட்டார்சைக்கிளில் சென்றார் இவர். அங்கிருந்த மேம்பாலத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, சாம்பல் நிற ஒட்டுப்பட்டையால் அதன் பதிவெண்ணை மறைத்தார்.
அதன்பிறகு, தமது அடையாளத்தை மறைக்கும் நோக்கில் ‘ஜாக்கெட்’, கையுறை, குளிர்கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொண்ட இவர், மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த சமையலறை கத்தியை எடுத்துக்கொண்டு, அந்த பெட்ரோல் நிலையத்தினுள் புகுந்தார்.
காசாளர் முகப்பிற்குப் பின்புறமாகச் சென்று, அங்கிருந்த காசாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லாப்பெட்டியைத் திறக்குமாறு இவர் சத்தமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயத்தில் அந்தப் பெண் காசாளர் அவ்வாறே செய்ய, கல்லாவில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு மேல் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார் இவர். ஆயினும், நான்கு மணி நேரத்தில் போலிஸ் இவரைக் கைது செய்தது.
இரு நாட்களுக்குப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆயினும், போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சந்தேகத்தின் பேரில் 2017 செப்டம்பர் 15ஆம் தேதி போலிஸ் இவரை மீண்டும் கைது செய்தது.
இம்மாதம் 17ஆம் தேதி இவருக்கு தண்டனை அறிவிக்கப்படவிருந்த நிலையில், நீதிமன்றத்திலிருந்து தப்பியதால் நீதிபதி இவருக்கெதிராக கைதாணை பிறப்பித்தார்.