நிதிப் பிரச்சினையில் இருந்த வாகனத்துறை ஆலோசகரான 36 வயது ஆபிரகாம் ராக், அந்தச் சிக்கலிலிருந்து வெளிவர பல மில்லியன் வெள்ளியை குறுக்குவழியில் பெற திட்டம் ஒன்றை வகுத்தார். ஆனால், ஆபிரகாமையும் அவரது தாயாரையும் அது சிறையில் தள்ளுமென்று அப்போது அவர் நினைத்திருக்கமாட்டார்.
தன் தாயாரின் பெயரில் காப்புறுதி ஒன்றை வாங்கி, பின்னர் அவர் இறந்துபோனதாக பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து பணம்பெறுவதுடன், தாயாரின் மத்திய சேம நிதியை பெற்றுக்கொள்ளவும் எண்ணினார் ஆபிரகாம்.
எந்தக் காப்புறுதித் திட்டம் ஆக அதிகமான தொகையை அளிக்கிறது என்பதைக் கண்டறிய அவர் இணையத்தில் வலைவீசித் தேடினார்.
அதனையடுத்து, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் 54 வயதான தமது தாயார் தலத் ஃபர்மானின் பெயரில் வாழ்நாள் காப்புறுதி, பயணக் காப்புறுதி ஆகியவற்றை ஆபிரகாம் வாங்கினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தாயும் மகனும் பாகிஸ்தானுக்குச் சென்றனர். அங்கு போக்குவரத்து விபத்து ஒன்றில் தமது தாயார் இறந்துவிட்டதாக பொய்யான ஆவணத்தை தயார் செய்தார் ஆபிரகாம்
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் அவர் மேற்கொண்ட பணம் பெறும் நடவடிக்கைகளில் அவருக்கு $3.7 மில்லியனுக்கும் அதிகமான தொகை கிடைத்தது. அதில் மத்திய சேம நிதி, என்டியுசி இன்கம் கோஆப்பரேட்டிவ் ஆகியன இணைந்து $130,000ஐ வழங்கியிருந்தன.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குழறுபடி இருந்ததை ஏஎக்ஸ்ஏ காப்புறுதி நிறுவனம் போலிசுக்கு தகவல் அளித்ததன்பேரில் மோசடி வெளிவந்தது.
மோசடியில் ஈடுபட்ட ஆபிரகாமுக்கு மூன்றாண்டுகள், 10 மாதச் சிறைத் தண்டனையும் அவரது தாயாருக்கு 13 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.