மானபங்க வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
சென்ற புதன்கிழமை தம் மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தேசிய பல்கலைக்கழக மாணவரான 23 வயது டெரன்ஸ் சியாவ் காய் யூவானுக்கு எதிராக 21 மாதம் கண்காணிப்பு ஆணை தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
மாணவருக்கு குறைவான தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக பதிவாளர்கள் பலர் குறைபட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இதன் தொடர்பில் முன்னதாக பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், நீதிமன்ற தீர்ப்பில் தங்களுக்கு இணக்கம் இல்லாததால் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக தலைமைச் சட்ட அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தம்மிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
தீர்ப்பு தம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகவும் தலைமைச் சட்ட அதிகாரியின் முடிவு தம்முடைய எண்ணத்துடன் ஒத்துப்போவ தாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் பேசிய அைமச்சர், "இந்த வழக்கு மக்களுக்கு உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை குறை சொல்லக் கூடாது. அவர்கள் இயன்ற அளவு தங்களுடைய கடமைகளை ஆற்றுகின்றனர்," என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் எம்ஆர்டி ரயிலில் சென்ற பெண்ணின் இருக்கைக்கு அருகே அமர்ந்த மாணவர் அந்த பெண்ணின் தொடையை இருமுறை தொட்டு மானபங்கப்படுத்தினார்.
இதனால் பெண் வேறு இடத்தில் அமர்ந்து கொண்டார். அப்போதும் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் இறங்கிய பெண்ணை பின்தொடர்ந்த மாணவர், மின்படிக்கட்டில் இறங்கும்போது தமது விரல்களால் கால்சட்டை அணிந்திருந்த பெண்ணின் பின்புறத்தைத் தொட்டார்.
உடனே நிலைய அதிகாரிகளிடம் அந்தப் பெண் புகார் செய்தார். ஆனால் அதற்குள் மாணவர் ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறி விட்டார். இதனால் போலிசில் அவர் புகார் அளித்தார்.
இதையடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு டெரன்ஸ் சியாவ் காய் யூவான் கைது செய்யப்பட்டார். சென்ற புதன் கிழமை நீதிமன்றம் அவருக்கு 21 மாதம் கண்காணிப்பு ஆணையை விதித்தது. ஆனால் மாணவருக்கு ஆறு வாரம் சிைறத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மாவட்ட நீதிபதி ஜஸ்விந்தர் கோர், சியாவின் குற்றச்செயல் சிறிய அளவிலான அத்துமீறல் என்று குறிப்பிட்டார். மாணவரின் தேர்வு முடிவுகள் அவர் எதிர்காலத்தில் சிறந்த நிலைக்கு வரக்கூடிய சாத்தியம் இருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே நியூபேப்பருக்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தின் தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பெண்ணின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் கார்மென் சியவ் என்று தமது பெயரை வெளியிட்ட அவர், மாணவரின் செயல் சிறியதாக இருக்கலாம், ஆனால் அந்த செயல் என் மீது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றார். "ரயிலில் ஏறும்போதெல்லாம் மற்றவரிடம் அவநம்பிக்கை ஏற்படுகிறது. முடிந்த அளவு ஒரு பெண்ணின் அருகில் நிற்கவோ உட்காரவோ செய்கிறேன். பொது இடங்களில் கால் சட்டை அணிவதை அசௌகரியமாக கருதுகிறேன். மின்படிக்கட்டுக்குப் பதிலாக மின்தூக்கிகளை பயன்படுத்துகிறேன்," என்று 28 வயது பெண் கூறினார்.

