மலேசியாவின் கோரிக்கைக்கு இணங்கி ஆர்டிஎஸ் எனும் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எம்ஆர்டி திட்டப்பணியை மேலும் ஒரு மாத காலத்துக்கு, அதாவது அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தாமதப்படுத்த சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் ஆகும் கூடுதல் செலவுகளிலிருந்து விலக்களிக்கவும் சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இம்மாத இறுதிக்குப் பின்னரும் ஆர்டிஎஸ் திட்டத்தைத் தாமதித்தால், செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு இதன் தொடர்பில் ஆகும் கூடுதல் செலவுகளைக் கோர சிங்கப்பூருக்கு உரிமை இருப்பதாகவும் கூறப்பட்டது.
சிங்கப்பூரின் உட்லண்ட்சிலிருந்து மலேசியாவின் புக்கிட் சாகர் வரை இரு நாடுகளுக்கிடையே 4 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் இணைப்பை உருவாக்க இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் ஒன்றில் கடந்த ஆண்டு கையொப்பமிட்டன.
ஆனால், கடந்த மார்ச் மாதத்தில், இந்தத் திட்டத்தின் தொடர்பில் பதிலளிக்க ஆறு மாதத் தவணை கோரியது மலேசியா. அதனையடுத்து, இந்தப் பணிகளை செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஒத்திவைக்க மே மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளும் முடிவுசெய்தன.
ஆறு மாத ஒத்திவைப்புக்காக சிங்கப்பூருக்கு மலேசியா $600,000க்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டது.
இந்த ரயில் திட்டத்தின் செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளை மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.