உடல் நலக்குறைவுடன் இருக்கும் பயணிகள் பேருந்துகள், எம்ஆர்டி ரயில்களில் பயணம் செய்வது எளிதாக்கப்படுகிறது.
அத்தகைய பயணிகள், இன்று முதல், பயணத்துக்கு முன்பாக, எம்ஆர்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் உள்ள டிரான்சிட்லிங்க் அலுவலகங்களில் ஒட்டுவில்லை ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
பயணிகளுக்கு அமர இடம் தேவைப்படுகிறது என்பதை மற்ற பயணிகள் தெரிந்துகொள்ள அந்த ஒட்டுவில்லை உதவும்.
பார்த்ததும் தெரிந்துகொள்ள முடியாத உடல்நலப் பிரச்சினைகளுடன் இருக்கும் பயணிகளுக்கு உதவும் நோக்கிலான இந்தத் திட்டம் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய சோதனைத் திட்டமாகும்.
இதயப் பிரச்சினை, மூட்டு வலி உடையோர், பக்கவாதம், புற்றுநோய் போன்றவற்றிலிருந்து மீள்வோர், செயற்கைக் கால் பொருத்தியுள்ளோர் போன்றவர்களுக்கு இந்தத் திட்டம் உதவும்.
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த சோதனைத் திட்டம் ஆராயப்படும்.