செங்காங், பொங்கோல் எல்ஆர்டி பாதைகளில் நேற்று ரயில் சேவைத் தடை ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரு ரயில் பாதைகளும் முடங்கியதாக காலை 6.08 மணி அளவில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் டுவிட்டரில் பதிவு செய்தது.
எல்ஆர்டி ரயில் சேவைத் தடையால் காலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்களும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
சேவைத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது.
காலை 7 மணி அளவில் பொங்கோல் எல்ஆர்டி ரயில் பாதையில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது. ஒரு மணி நேரம் கழித்து, செங்காங் எல்ஆர்டி சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.
சேவைத் தடையின்போது நிலையங்களுக்கு இடையே இருந்த ரயில்களில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் 50 வயது முஸ்தஃபா ஸைனுதீனும் ஒருவர். அதிகாலை 5.35 மணிக்கு ரென்ஜோங் நிலையத்தில் எல்ஆர்டி ரயிலில் ஏறிய அவர் காலை 7.55 மணிக்கு செங்காங் நிலையத்தில் இறங்கினார்.
“ரயிலுக்கு உள்ளே இருட்டாக இருந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு குளிர்சாதன வசதியில்லாமல் தவித்தோம்,” என்றார் திரு ஸைனுதீன். வேலைக்குத் தாமதமானதால் அவர் விடுப்பு எடுத்து வீடு திரும்பினார்.