930,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

930,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

1 mins read
522d6491-1a14-4e81-b6f6-05651edf5f85
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் சுமார் 930,000 சிங்கப்பூர் குடும்பங்கள், பொதுப் பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி வழங்கும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டை இம்மாதம் பெறுவார்கள். வீட்டு வகையைப் பொறுத்து, இந்தக் குடும்பங்கள் 100 வெள்ளி வரையிலான யு-சேவ் தள்ளுபடியைப் பெறுவார்கள் என நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்கு 100 வெள்ளியும் மூவறை வீடுகளில் வசிப்போருக்கு 90 வெள்ளியும் கிடைக்கும்.

நான்கறை வீடுகளுக்கு 80 வெள்ளியும் ஐந்தறை வீடுகளுக்கு 70 வெள்ளியும் எக்சிகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளுக்கு 60 வெள்ளியும் கிடைக்கும். ஒன்றுக்கு மேலான வீடுகளை வைத்திருப்போர் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெற மாட்டார்கள்.

தகுதிபெறும் குடும்பங்களின் மின்சார விநியோகிப்பு நிறுவனம் எதுவாக இருந்தாலும், யூ-சேவ் தள்ளுபடிகள் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என அமைச்சு தெரிவித்தது. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் மூன்று அம்சங்களில் ஒன்று யு-சேவ். இந்தத் தள்ளுபடி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் பயனீட்டுக் கட்டணச் செலவைக் குறைக்க இந்தத் தள்ளுபடி உதவுகிறது. இந்தத் தள்ளுபடியை வழங்க அரசாங்கம் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 300 மில்லியன் வெள்ளி செலவிடுகிறது.