'கம்ஃபர்ட் டெல்குரோ' டாக்சி ஓட்டுநர் ஒருவர் சாலையில் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளுக்கு முன் மண்டியிட்டு மன்றாடியதைக் காட்டும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அது குறித்து வாரியம் விளக்கமளித்துள்ளது.
மவுண்ட் எலிசபத் ரோட்டில் நேற்று சுமார் 12.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் படத்தைத் தனது வாசகர்கள் அனுப்பியதாக ஸ்டாம்ப் செய்தி இணையத்தளம் கூறியுள்ளது. தனது டாக்சியைச் சாலையோரத்தில் நிறுத்தி, அதன் இயந்திரத்தை ஓடவிட்டுக்கொண்டே அந்த ஆடவர் அதற்குள் இளைப்பாறியதற்காக தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் அவரைப் பிடித்ததாகக் குறிப்பிடும் குறுஞ்செய்தி, படத்துடன் ஸ்டாம்பிற்கு அனுப்பப்பட்டது.
ஆனால், அந்த ஓட்டுநர் தனது டாக்சிக்குள் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்ததால் அதிகாரிகள் அவரை அணுகியதாக வாரியம் ஸ்டாம்ப்பிடம் விளக்கி, முன்னதாகப் பரவிய புரளியை முடிவுக்குக் கொண்டுவந்தது. பொதுச்சேவைக்கான வாகனம் ஒன்றில் இவ்வாறு செய்ததற்காக அந்த ஓட்டுநருக்கு 200 வெள்ளி அபராதக் கட்டணச்சீட்டு கொடுக்கப்பட்டது.
புகைத்தல் (குறிப்பிட்ட இடங்களில் தடை) சட்டத்தின்கிழ், தடை செய்யப்பட்ட இடங்களிலோ அல்லது பொதுச்சேவை வாகனங்களிலோ புகைப்பிடிப்போருக்கு அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

