குட்டைப் பாவாடைகளையும் இறுக்கமான ஆடைகளையும் அணிந்திருந்த பெண்களைப் பின்தொடர்ந்து மின்படிக்கட்டுகளில் அவர்களை ரகசியமாகப் படமெடுத்து வந்த பலதுறைத் தொழிற்
கல்லூரி மாணவர் ஒருவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இப்படிப் படமெடுத்துக்கொண்டு இரண்டு மாதங்களுக்குக் குறைவான காலக்கட்டத்தில் 240க்கும் அதிகமான படங்களைச் சேகரித்த ஷான் இங் வெய் சுவான், கண்காணிப்பு நடவடிக்கை உத்தரவுக்குத் தகுந்தவரா என்று ஆராயும் ஓர் அறிக்கைக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு பெண்ணின் மானத்திற்குக் களங்கம் விளைவித்த இரண்டு குற்றங்களை இங் புரிந்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது. இதுபோல மற்றொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இங், தனக்குத் தெரியாத பெண்களின் குட்டைப் பாவாடைகளுக்குள் தனது கைபேசியால் படம் எடுக்கத் தொடங்கினார். அதே ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியில் ஹவ்காங் கடைத்தொகுதியிலுள்ள புத்தகக் கடையில் இங், அங்கிருந்த 17 வயது பெண்ணை இதேபோல ஆபாசமாகப் படமெடுத்ததை வாடிக்கையாளர் ஒருவர் கண்டார். இங் கடையைவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோதும் அந்த வாடிக்கையாளர் போலிசார் வரும்வரை அவரைப் போகவிடாமல் தடுத்தார். இங்கைக் கைது செய்த போலிசார் அவரது கைபேசியைப் பறிமுதல் செய்தனர்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதிக்கும் நவம்பர் 28ஆம் தேதிக்கும் இடையே இங் குறைந்தது 99 முறை இப்படி படமெடுத்ததாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
தொடக்கத்தில் அவர் எதிர்நோக்கிய 135 குற்றச்சாட்டுகள் ஒன்றிணைக்கப்பட்டு பின் மூன்று குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டன. நீதிமன்றம் வரும் நவம்பர் 4ஆம் தேதி இங்கிற்குத் தண்டனை விதிக்கும். பெண்ணின் மானத்திற்குக் களங்கம் விளைவித்த ஒவ்வொரு குற்றத்திற்காகவும் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.