பணத்துக்காக தமது பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் நிறுவனங்களைப் பதிவு செய்ய அனுமதித்தார் 47 வயது ஆங் செங் குவான். இதன்மூலம் ஸ்கில்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பை ஏமாற்றி ஏறத்தாழ $40 மில்லியன் அபகரித்த மோசடிக் கும்பலின் ஒரு பகுதியானார். வர்த்தகங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்காக ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டம் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பாக ஆறு குற்றச்சாட்டுகள், இயக்குநரின் கடமையை மீறுவது தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் பேரில் ஆங் குற்றவாளி என நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும்போது மேலும் 20 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஒன்பது ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரிடம் 8,000க்கும் மேற்பட்ட மோசடி சமர்ப்பிப்புகளைக் கும்பல் சமர்ப்பித்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாக்கில் 43 வயது சிம் சூன் லீயின் அறிமுகம் ஆங்கிற்குக் கிடைத்தது.
சிம் சட்டவிரோதக் காரியங்களில் ஈடுபடப்போவதாகச் சந்தேகம் ஏற்பட்டும் தமது பெயரைப் பயன்படுத்தி நிறுவனங்களைப் பதிவு செய்ய சிம்முக்கு ஆங் அனுமதி அளித்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அவற்றுக்குத் தேவையான ஆவணங்களில் ஆங் கையொப்பமிட்டார். இந்த நிறுவனங்களைக் கொண்டு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பிடம் மோசடி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. சிம் கூறியதைக் கேட்டு இரண்டு வங்கிக் கணக்குகளை ஆங் திறந்தார். கிடைக்கும் காசோலைகளை அந்த வங்கிக் கணக்குகளில் ஆங் போட்டார்.
இதற்காக ஒவ்வொரு முறையும் ஆங்கிற்கு $3,000லிருந்து $5,000 கிடைத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதியன்று ஆங் சீனாவுக்குச் சென்றார். சிங்கப்பூர் அதிகாரிகள் தம்மைத் தேடுவதாக தமது மனைவி மூலம் ஆங்கிற்குத் தெரியவந்ததும் அவர் சிங்கப்பூர் திரும்பவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். சிங்கப்பூர் வந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆங் முன்பு சிறைத் தண்டனை அனுபவித்தவர். கிராப் ஓட்டுநர் பணியை இழந்த ஆங் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.