மலேசியாவில் உள்ள 'டெலிக்' பண்ணையிலிருந்து காடை முட்டைகளை இறக்குமதி செய்ய, சிங்கப்பூர் உணவு அமைப்பு தற்காலிகத் தடை விதித்துள்ளது. நாட்டில் இறக்குமதியாகும் மொத்த காடை முட்டைகளில் கிட்டத்தட்ட 20% இப்பண்ணையிலிருந்துதான் வருகிறது.
பெண் காடைகளுக்கு முட்டை உருவாகாமல் அல்லது முட்டை இட்டாலும் அது குஞ்சு பொரிக்காமல் இருக்க, பண்ணையின் காடை முட்டைகளுக்குள் 'நிக்கார்பஸின்' என்ற ஒருவகை மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பண்ணையின் முட்டைகளில் அம்மருந்து இல்லை என்றும் உட்கொள்வதற்கு பாதுகாப்பானவை என்றும் உறுதிசெய்தபின்னரே தடை நீக்கப்படும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூர் பண்ணைகளிலிருந்து மட்டுமின்றி மலேசியா, சீனா, தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்தும் காடை முட்டைகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு மட்டும் மலேசியாவின் 'டெலிக்' பண்ணையிலிருந்து கிட்டத்தட்ட 17 மில்லியன் காடை முட்டைகளை சிங்கப்பூர் இறக்குமதி செய்தது.

