சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் ஆயுதப்படை ஆராய்ந்து வருவதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் கூறினார்.
செப்டம்பர் 14ஆம் தேதியன்று இரண்டு எண்ணெய் ஆலைகளை மிகவும் துல்லியமாகத் தாக்கிய அந்த அதிநவீன ஆளில்லா வானூர்திகள் ரேடார் கண்காணிப்புக் கருவியில் தென்படவில்லை. அத்தகைய வானூர்திகள் மட்டுமின்றி பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படும் வானூர்திகளும் அழிவை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர் இங் கூறினார். லண்டனின் கேட்விக் விமான நிலையத்தி லும் சாங்கி விமான நிலையத்திலும் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களை இதற்கான உதாரணங்களாக அவர் சுட்டினார்.
பலதரப்பட்ட மிரட்டல்களைச் சமாளிப்பதற்கு ஒற்றை பதில் நடவடிக்கை இருக்க முடியாது என்று கூறினார் டாக்டர் இங். “ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான விலையில் வாங்கப்படும் ஆளில்லா வானூர்திகளைச் சமாளிக்க நூற்றுக்கணக்கான மில்லியன் வெள்ளி மதிப்புள்ள அதிநவீன கருவிகளை வாங்குவது உகந்ததாக இருக்காது,” என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஆளில்லா வானூர்திகள் தொடர்பில் பல்வேறு அமைச்சு கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச் சர் விளக்கினார். விதிமுறைகளை மீறி ஆளில்லா வானூர்தி களைப் பயன்படுத்துவோருக்கு எதிராக சில சட்டங்களை வகுப்பதில் போக்குவரத்து அமைச்சு பணியாற்றி வருகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் ஆளில்லா வானூர்திகள் பறக்கத் தடை விதிப்பது பற்றி உள்துறை அமைச்சும் போலிசும் பரிசீலித்து வருகின்றன. அவற்றுக்கு உதவி தேவைப்படும் போது சிங்கப்பூர் ஆயுதப்படை உதவி நல்கும் என்றார் டாக்டர் இங்.