புக்கிட் பாத்தோக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வரும் ஆடவர், மேல்மாடியில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று (அக்டோபர் 8) காலை 10.40 மணியளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 4ல் உள்ள புளோக் 416ன் ஐந்தாவது மாடியில் தீப்பற்றியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்து நிகழ்ந்த சமயத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று மின்னேற்றப்பட்டது தெரியவந்தது. அந்தச் சாதனம் UL2272 தரச் சான்றிதழ் பெற்றிருந்ததா என்பது தெரியவில்லை.
எனவே, UL2272 தரச் சான்றிதழ் பெறாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை அப்புறப்படுத்திவிடுமாறும் பயன்படுத்த வேண்டாமெனவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், மொத்தம் 49 தீச்சம்பவங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.