மின்னல் வேகத்தில் மாறிய உணர்ச்சியால் தாம் நேசித்த பெண் இறந்துவிட்டதாகவும் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் தாம் இருந்ததில்லை என்றும் நிரந்தரவாசியான மலேசியர் போ சூன் ஹோ நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஸாங் ஹுவாஸியாங், 28, என்னும் மாதை 2016 மார்ச் மாதம் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் சம்பவத்தின்போது நிகழ்ந்தவற்றை நீதிமன்றத்தில் விளக்கினார்.
தாம் நேசித்த ஸாங் மற்ற இரு ஆடவர்களுடன் பழகியதை அறிந்து தாம் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றதாக அவர் கூறினார்.
ஸாங்கை அளவுக்கு அதிகமாக நேசித்ததன் காரணமாக அந்த ஆத்திரம் ஏற்பட்டதாகத் தெரிவித்த போ, 51, கதவில் தொங்கிய துணியை எடுத்து தமது முகத்தில் இருந்த வியர்வையைத் துடைத்ததாகவும் ஸாங்கை பயமுறுத்தும் நோக்கத்துடன் அந்தத் துணியை அவரது கழுத்தில் சுற்றியதாகவும் அந்தப் பெண் அசைவற்றபோதுதான் என்ன நேர்ந்தது என்று தமக்குத் தெரிய வந்ததாகவும் போ கூறினார்.
“இதனை நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சட்டென்று நடந்து முடிந்துவிட்டது,” என்றார் அவர். வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.