சிலருக்கு லாட்டரி சீட்டில் பணம் கிடைப்பதில் அலாதி இன்பம். ஆனால் தவறுதலாக வேறு ஒருவரின் லாட்டரி சீட்டை எடுத்ததுடன் அதற்கு $5,000 பரிசுத் தொகையும் கிடைத்துள்ளதால் அந்தச் சீட்டுக்குச் சொந்தக்காரரைத் தீவிரமாகத் தேடி வருகிறார் ஒருவர். தம்மை ‘யங்’ என்று மட்டும் அடையாளம் கூறிக்கொண்ட அந்த 63 வயது வியாபாரி, ‘ரெட்ஹில்’ வட்டாரத்தில் உள்ள ஒரு ‘சிங்கப்பூர் பூல்ஸ்’ கடைக்கு சனிக்கிழமை அன்று சென்றார். அங்குத் தாம் வாங்கிய லாட்டரி சீட்டுகளைச் சரியாகப் பார்க்காமல் பணப்பைக்குள் வைத்துவிட்டார்.
ஆனால் தாம் வாங்காத ஒரு சீட்டைப் பின்னர் அடையாளம் கண்டுகொண்டார் யங். தாம் கடைக்குச் சென்ற நேரமும் சீட்டில் இருந்த நேர முத்திரையும் வேறாக இருந்தது. அத்துடன் சீட்டில் இருந்த ‘4069’ எண்ணுக்கு அன்று மாலை நடந்த குலுக்கில் $5,000 பரிசுத் தொகையும் கிடைத்திருந்தது. சீட்டை ஒப்படைக்க மீண்டும் கடைக்குச் சென்றபோது அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் எப்படியாவது லாட்டரி சீட்டுக்குச் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க யங் முயன்று வருகிறார்.