நீரிழிவுக்கு எதிரான போர்: சுகாதார அமைச்சு தீவிரம்

நீரிழிவுக்கு எதிரான போர்: சுகாதார அமைச்சு தீவிரம்

2 mins read
552c8d56-685b-4b43-9270-3869684cfa5c
-
Google News Preferred Icon

மிதமிஞ்சிய இனிப்பு கலந்த சுவை பானங்கள் அடைத்து விற்கப்படுவதை விளம்பரம் செய்வது முற்றாகத் தடை விரைவில் அறிமுகமாகிறது. உலக அளவில் அந்தத் தடையை அறிமுகம் செய்யும் முதல் நாடு சிங்கப்பூர்.

ஒளி/ஒலிபரப்பு, அச்சு வெளியீடு, இணைய வெளியீடு என உள்ளூரில் உள்ள அனைத்து விதமான ஊடகங்களும் இந்தத் தடையைப் பின்பற்றுவது கட்டாயம். பயனீட்டாளர்களை வாங்கத் தூண்டும் வகையிலான விளம்பரங்களைக் குறைப்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.

இடைப்பட்ட அளவு அதிக அளவு வரையிலான சர்க்கரை ஆரோக்கியமற்றது என்பதை உணர்த்தும் வகையிலான முத்திரை அறிமுகம் ஆகிறது.

பானங்கள் அடைக்கப்பட்ட பொட்டலங்களின் முன்புறம் அந்த முத்திரை இடம்பெறும். போத்தல்கள், தகர டின்கள், பாக்கெட்டுகள் ஆகியனவற்றில் இடம்பெறும் பானங்கள் இதில் அடங்கும். இவற்றில் மூன்றில் ஒன்று அல்லது மூன்றில் இரண்டு உடனடி பானங்கள், மென்பானங்கள், பழச்சாறு, சுவையூட்டப்பட்ட பால் மற்றும் தயிர் ஆகியன உள்ளடங்கும்.

இவை எப்போது அறிமுகம் ஆகும், சரியாக எந்தெந்த பானங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்னும் விவரங்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்.

பொதுமக்களுக்கு அதிக தகவல் தருவதற்கான வாய்ப்புகளை வழங்கும் அதேநேரம் சர்க்கரை கலந்த பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சர்க்கரை அளவைக் குறைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த மாற்றங்கள் இடம்பெறும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று தெரிவித்தார்.

பொட்டலங்களின் முகப்பில் வெளியிடப்படும் முத்திரை வண்ணங்களில் பிரிக்கப்படும். பானம் சுகாதாரமானது, நடுத்தரம் வாய்ந்தது, சுகாதாரமற்றது என்னும் மூன்று தரங்களை அந்த வண்ணங்கள் குறிக்கும்.

இதுபோன்ற முத்திரைகளை 30க்கும் மேற்பட்ட நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. மேலும் இந்த நடவடிக்கை அவற்றுக்குப் பலனளித்துள்ளது. உதாரணமாக, சிலியில் சுகாதாரமற்றதாக முத்திரை மூலம் அறிவிக்கப்பட்ட பானங்களின் விற்பனை ஒன்றரை ஆண்டுகளில் 25 விழுக்காடு சரிந்துவிட்டது.

குறிப்பாக, சுகாதாரமற்றது என்று வகைப்படுத்தப்படும் பானங்களுக்கு முத்திரை ஒட்டப்படுவது கட்டாயம். அதேநேரம் உடல்நலத்துக்கு ஏற்ற பானங்களை ஊக்குவிக்கவும் முத்திரை பயன்படும். பயன்படுத்துவதா வேண்டாமா என்று முடிவெடுக்க பயனீட்டாளருக்கு உதவும் வகையிலான முத்திரையை ஒட்ட உடல்நலத்துக்கு ஏற்ற பானங்களைத் தயாரிப்போர் ஊக்குவிக்கப்படுவதாக சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் பேசியபோது அமைச்சர் டோங் கூறினார். நீரிழிவுக்கு எதிரான போரின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளுக்க சுகா தார அமைச்சு திட்டமிடுகிறது.

முன்கூட்டி அடைக்கப்பட்ட சுவை பானங்களின் சர்க்கரையை சிங்கப்பூரர்கள் குறைந்த அளவு உட்கொள்வதற்காக நான்கு அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி வரையில் சுகாதார மேம்பாட்டு வாரியமும் சுகாதார அமைச்சும் இணைந்து பொது மக்களிடமும் ஏராளமான அமைப்பு களிடமும் ஆலோசனை நடத்தின.