இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு லாரியும் சிக்கிய விபத்தில் இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.
உட்லண்ட்ஸ் ரோட்டுக்கும் மண்டாய் எஸ்டேட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்திலேயே 53 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர், சுயநினைவு இழந்த நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கடுமையாகக் காயமடைந்த அந்த ஆடவர் மாண்டதாக போலிசார் தெரிவித்தனர்.
இரண்டாவது மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மருத்துவ உதவியைப் பெற மறுத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த லாரிக்கு அடியில் ஒருவரின் உடல் சிக்கி நசுக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் சில படங்கள் காட்டுகின்றன.
விசாரணை தொடர்கிறது.