அடுத்து வரும் ஆண்டுகளில் பொது வீடமைப்பு மற்றும் தனியார் வீடமைப்புகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு $1 பில்லியனுக்கு மேல் செலவிடப்படவுள்ளது.
தற்போதைய பொருளியல் நிலையில் இதன்மூலம் தொழில்துறை பங்காளித்துவ நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று திட்டத்தை அறிவித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.
நேற்று ஃபோர்ட் கேனிங் பார்க்கில் நடந்த தேசிய வளர்ச்சி அமைச்சின் வருடாந்திர நிகழ்வில் கலந்துகொண்டார் திரு வோங்.
முக்கிய பங்காளிகளாக இருந்து வரும் ஆலோசகர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இதுபோன்ற திட்டங்களால் அதிக வாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர்.
இத்திட்டத்தின்கீழ் 1987க்கும் 1997க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட வீவக வீடுகள், அடுத்த ஆண்டில் இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதிபெறும்.
இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள கிட்டத்தட்ட 55,000 வீவக வீடுகள் முதல் கட்டத்திற்குத் தகுதிபெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து எஞ்சிய 175,000 வீடுகள் அடுத்தடுத்து மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதிபெறும்.
இதற்குமுன் 1986ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட வீவக வீடுகள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு தம் தேசிய தின பேரணி உரையில் விரிவாக்கப்பட்ட இத்திட்டம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி வீட்டினுள் மேம்பாட்டுப் பணிகள் முழுவதும் கழிவு விலையில் செய்யப்படும்.
இந்நிலையில் அனைத்து வீவக வீடுகளிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அரசாங்கம் $4 பில்லியனுக்கும் மேல் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆலோசகர்களுடன் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் நகர மன்றங்களோ அரசு அமைப்புகளோ கலந்து ஆலோசித்த பின்னரே திட்டங்கள் குடியிருப்பாளர்களுக்குக் காட்டப்படும்.
பின்னர் திரட்டப்பட்ட கருத்துகளைக்கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும். இனி அந்த வழக்கம் மாறும் என்று அமைச்சர் வோங் கூறினார். மேம்பாட்டுப் பணிகளுக்கான ஆரம்பக் கட்ட திட்டங்களிலேயே குடியிருப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
குடியிருப்பாளர்கள் தங்களின் வட்டாரத்தில் அமைந்துள்ள பொது இடங்களை ஈடுபாட்டுடன் திட்டமிட இனி அதிக வாய்ப்புகள் அமையும். அதன்படி அமைச்சு 50க்கும் மேற்பட்ட பூங்காக்களையும் ஒதுக்கவுள்ளது. பூங்காவின் அம்சங்கள் குறித்துக் குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதனால் குடியிருக்கும் சுற்றுச்சூழலில் பசுமையும் நிலைத்தன்மையும் அதிகரிக்கும் என்றார் திரு வோங்.
எந்தெந்த வட்டாரங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற மேல் விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.