சாலைகளிலும் விரைவுச்சாலைகளிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தும் தொடர்ந்து பலரும் அதை மீறி வருவது தெரியவந்துள்ளது.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் அப்படி விதிமீறி மின்ஸ்கூட்டர்களை இயக்கியதாக 700 சம்பவங்கள் பதிவாகி உள்ளன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் பல விதிமீறல்கள் கண்டறியப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது.
மின்ஸ்கூட்டர் ஓட்டிகளின் நடத்தையில் முன்னேற்றம் காணப்படாவிடில் ஒட்டுமொத்தமாக தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குத் தடை விதிக்கும் சாத்தியம் உள்ளது என்று அண்மையில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும், அத்தகைய விதிமீறல் சம்பவங்கள் தொடர்கின்றன. மின்ஸ்கூட்டர் ஓட்டி ஒருவர் ஈசூனில் இருந்து அங் மோ கியோ செல்ல சாலையைப் பயன்படுத்தியதும் மற்ற வாகனங்களுக்கு நிகரான வேகத்தில் அவர் சென்றதும் குறைந்தது நான்கு கார்களை அவர் முந்திச் சென்றதும் வாகன உள்புகைப்படக் கருவியில் பதிவான காணொளி காட்டியது.
அந்தக் காணொளி ஃபேஸ்புக்சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
விதிமீறியதாகப் பதிவான 700 சம்பவங்களிலும் மின்ஸ்கூட்டர்கள் கையகப்படுத்தப்பட்டதாக ஆணையம் கூறியது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்றும் அதிக எடை, அகலம் கொண்டிருந்த அல்லது சட்டவிரோத வேகமுடுக்கிக் கருவிகள் பொருத்தப்பட்ட மின்ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
“சாலை விதிகள் குறித்து மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் நன்கு அறிந்திருக்கமாட்டார்கள் என்பதால் சாலைகளிலும் விரைவுச்சாலைகளிலும் மின்ஸ்கூட்டர்களை இயக்குவது அவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற வாகனமோட்டிகளுக்கும் அபாயத்தை விளைவிக்கக்கூடும்,” என்றார் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி லீ பீ வா.
ஆகையால், தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் தாம் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், சோதனைகளில் தேர்ச்சி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துதல், காப்புறுதி எடுத்தல் ஆகிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வோர் மட்டுமே மீண்டும் மின்ஸ்கூட்டர் ஓட்ட அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார்.