பதின்ம வயதில், தனது இரு மூத்த சகோதரர்களைப்போல, கும்பலில் சேர விரும்பினார் திரு கெல்வின் குவாக். கும்பலின் மற்ற உறுப்பினர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, ஹெராயின் எனும் போதைப் பொருளை முதன்முதலாக அவர் உட்கொண்டார்.
அந்தப் பழக்கத்தைக் கைவிட முடியாத குவாக், அது தொடர்பான குற்றங்களுக்காக 1977, 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 10 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். குவாக் போதைப் பழக்கத்தை விட்டொழிப்பது அவசியம் என்று கருதிய அவரது குடும்பத்தார் ‘தி ஹெல்பிங் ஹேண்ட்’ அமைப்பின் உதவியை நாடினர்.
தற்போது 60 வயதாகும் அவர், கடந்த 30 ஆண்டுகளாக போதைப்பொருள், குற்றவியல் தொடர்பிலான குற்றச்செயல்களிலிருந்து விலகி இருப்பதுடன் மெத்தடிஸ்ட் மிஷன் சங்கத்தில் தற்போது சமூக ஊழியராக இருக்கிறார்.
மஞ்சள் நாடா அமைப்பு நேற்று நடத்திய இரண்டாம் வாய்ப்புகள் விருது நிகழ்ச்சியில் திரு குவாக்குக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஐவரில் இவரும் ஒருவர்.
முன்னாள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆக உயரிய கௌரவமாக இந்த விருது கருதப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் குற்றச்செயலில் ஈடுபடாத, முன்னாள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் இந்த விருதுக்குத் தகுதி பெற அவர்கள் மிகச் சிறந்த சமூக பங்களிப்பையும் நல்கியிருக்க வேண்டும்.
நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உள்துறை, சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் இந்த விருதுகளை வழங்கினார்.
மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை ஈராண்டுகளுக்கு முன்பு 44%ஆக இருந்ததாகக் குறிப்பிட்ட திரு அம்ரின் அமின், தற்போது அது 24%ஆக இருப்பதாகச் சொன்னார். உலகில் இது ஆகக் குறைவான அளவு என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார் அவர்.
முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு ஆதரவளித்து வரும் அவர்களது குடும்பத்தார், முதலாளிகள் போன்றவர்களுக்கு நன்றியையும் திரு அம்ரின் தெரிவித்துக்கொண்டார்.
முதல்முறை சிறைக்குச் சென்று திரும்பிய குவாக், மீண்டும் மீண்டும் போதைப்பொருளை உட்கொள்வது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சொன்னார்.
அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போது போதைப்பொருள் உட்கொள்வதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்ததாகக் கூறினார் குவாக். ஆனால் மறுவாழ்வு இல்லத்தில் சேர்ந்தபிறகு ஒவ்வொரு நாளும் அவருக்கு இனிய நாளாயிற்று.
மற்ற போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலும் அவருக்கு ஏற்பட்டது.
மறுவாழ்வு இல்லத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ஒரு சமூக ஊழியராகச் சேர்ந்த அவர், கிழக்கு ஆசியாவில் இருக்கும் மறுவாழ்வு இல்லங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார். முன்னாள் குற்றவாளிகளுக்கான போதைப்பொருளுக்கு எதிரான இயக்கங்கள், மறுவாழ்வு நடவடிக்கைகள் போன்றவற்றில் அவர் பங்கேற்றார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான குவாக், “போதைப் பழக்கத்தைக் கைவிடுவது எளிதல்ல. மீண்டும் சமூகத்துக்குத் திரும்பும்போது மனக் கலக்கமடைவர்,” என்றார்.
“வெற்றிக்கு குறுக்குவழி இல்லை என்பதை முன்னாள் குற்றவாளிகள் மனதில் கொள்வார்கள் என நம்புகிறேன். அனைத்தும் படிப்படியாகவே செய்யப்பட வேண்டும்,” என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் திரு குவாக்.