சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் இணைப்புத் திட்டம் (ஆர்டிஎஸ்) குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் மலேசிய அமைச்சரவை முடிவு செய்யும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நேற்று ஜோகூர் பாருவில் தெரிவித்துள்ளார்.
விரைவு ரயில் இணைப்புத் திட்டத்தின் (ஆர்டிஎஸ்) விவரங்களை சிங்கப்பூருக்குத் தெரிவிப்பதற்கான அக்டோபர் 31ஆம் தேதி காலக்கெடுவுக்குள் மலேசிய அமைச்சரவை கூடி விவாதிக்க விருக்கிறது.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் சொன்னார். கடந்த வெள்ளிக்கிழமை 2020க்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டபோது, போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக நீண்டகாலத் தீர்வாக ஆர்டிஎஸ் திட்டத்தை மேற்கொள்ள மலேசிய அரசாங்கம் விரும்புவதாக மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
நாள்தோறும் 300,000க்கும் அதிகமான மலேசியர்கள் பயன்படுத்தும் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரு இணைப்பு பாதைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விவகாரமாக உள்ளது என்று திரு லிம் சொன்னார்.
நான்கு கிலோ மீட்டர் தூர ஆர்டிஎஸ் ரயில் பாதை சிங்கப்பூரில் கட்டப்படவுள்ள உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்தையும் மலேசியாவின் ஜோகூரிலுள்ள புக்கிட் சகார் நிலையத்தையும் இணைக்கும்.
முன்னதாக இத்திட்டம் இவ்வாண்டு தொடங்கப்பட்டு 2024 டிசம்பரில் நிறைவுபெறுவதாக இருந்தது.
முன்னைய அறிக்கையின்படி, ஒவ்வொரு திசையிலும் மணிக்கு 10,000 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடியதாக ஆர்டிஎஸ் இருக்கும் எனக் கூறப்பட்டது.
இத்திட்டத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை இடைக்காலமாக நிறுத்திவைக்க இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவும் சிங்கப்பூரும் உடன்பட்டன. திட்டத்தை ஒத்தி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட $600,000 செலவை சிங்கப்பூருக்குக் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக்கொண்டது.
அதே நேரத்தில் இணைப்புப் பாதை திட்டத்திற்கான செலவைக் குறைக்கும் வழிகளை பக்கத்தான் ஹரப்பான் நிர்வாகம் ஆராய்ந்தது.
மலேசியர்கள் தினமும் சிங்கப்பூருக்கு வரும், ஒரு வழிப்பாதைக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட 15 ரிங்கிட் கட்டணம் அதிகம் என்று திரு அந்தோணி லோக் கூறினார்.
கூடுதல் செலவு இல்லாத வகையில் இத்திட்டம் பற்றி முடிவு செய்வதற்கான காலக் கெடுவை அக்டோபர் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு செப்டம்பர் மாதம் தெரிவித்தது.