தேசிய நினைவுச் சின்னங்களின் உரிமையாளர்கள் தங்கள் பழமைப் பாதுகாப்புப் பணிகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $15 மில்லியன் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சால் வழங்கப்படும் இந்நிதி தேசிய நினைவுச் சின்னங்கள் நிதியில் சேர்ப்பிக்கப்படும். தேசிய நினைவுச் சின்னங்களின் பழமைப் பாதுகாப்புக்காக 2008ஆம் ஆண்டு தொடங்கி வழங்கப்பட்டு வரும் இந்நிதி இப்போது மூன்றாவது முறையாக அளிக்கப்படுகிறது.
தேசிய நினைவுச் சின்னங் களின் உரிமையாளர்களாக இருக் கும் லாபநோக்கமற்ற அமைப்பு களும் சமய அமைப்புகளும் இந்த நிதிக்கு இவ்வாண்டு இறுதி வரை விண்ணப்பிக்கலாம். கேவனா, ஆண்டர்சன், எல்ஜின் ஆகிய மூன்று சிங்கப்பூர் பாலங் களையும் தேசிய நினைவுச் சின் னங்களாக தேசிய மரபுடைமைக் கழகம் அறிவித்துள்ளது என்று நேற்று அந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரி வித்தார்.
“கடந்த இருநூறாண்டுகளில் இந்தப் பாலங்கள் நமது தேசத்தின் வளர்ச்சியில் அங்கம் வகித்துள் ளன. சிங்கப்பூர் ஆற்றின் முகப்பு தான் பழைய சிங்கப்பூர் துறைமுகம்.
“அங்குதான் நமது முன்னோர்கள் கால்பதித்து பின்னர் இத்துறைமுகத்தில் பணியாற்றினார்கள், துறைமுகத்தைச் சுற்றி வசித்து வந்தார்கள்,” என்று திருவாட்டி ஃபூ கூறினார். அடுத்த இரு வாரங்களுக்கு அதாவது வரும் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் இம்மூன்று சிங்கப்பூர் ஆற்றுப் பாலங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
அங்கு உண்மையான வடி விலான ‘ஒரிகாமி’ படகுகள், வரலாற்று நினைவுகளைச் சுண்டி இழுக்கும் ‘ட்ராம்’ ரயில் வண்டிக் கூண்டு, சிங்கப்பூர் ஆற்றின் பழைய, புதிய நினைவுகளைப் பிரதிபலிக்கும் கலைப்படைப்பு ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிப் பொருட்கள் தேசிய மரபுடைமைக் கழகத்தின் ‘நினைவுச்சின்னங்கள் நினைவூட்டும் மைல்கற்கள்’ எனும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நிகழ்ச்சி சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையும் குறிக்கிறது. இந்த மூன்று சிங்கப்பூர் ஆற்றுப் பாலங்களும் பாடாங் திடலும் தேசிய நினைவுச் சின்னங்களாக அரசிதழில் இடம்பெறும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று தெரிவித்தார்.