பதினான்கு வயது மாணவன் ஒருவனுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக்கொண்ட தொடக்கப்பள்ளி துணை முதல்வர் ஒருவருக்கு நேற்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆடவர் கடுமையான பாலியல் குற்றங்கள் புரிந்ததாகக் கூறிய மாவட்ட நீதிபதி சேய் யுவென் ஃபாட், தமது அதிகாரத்தை அந்த ஆடவர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாகச் சொன்னார்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த ஆடவர் மீதான குற்றம் நீருபணமானது. இப்போது அவருக்கு 57 வயதாகிறது.பாதிக்கப்பட்ட அந்த மாணவனின் அடையாளத்தைப் பாதுகாக்க, நீதிமன்ற உத்தரவின் காரணமாக அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. பள்ளி துணை முதல்வர் பணியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1999ஆம் ஆண்டில் அச்சிறுவனும் அவனது தாயாரும் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்தனர். அப்போது அவனுக்கு ஒன்பது வயது. சிங்கப்பூரரான அவருக்கு இப்போது 30 வயதாகிறது.பாதிக்கப்பட்ட அச்சிறுவன் 2003ஆம் ஆண்டில் தொடக்கநிலை 5 பயின்றதாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் ஜேம்ஸ் சியூ முன்னதாகக் கூறியிருந்தார்.
பள்ளியின் துணைத் தலைமைச் சட்டாம்பிள்ளையாக இருந்த அவன், பள்ளி துணை முதல்வராக இருந்த அந்த ஆடவரைத் தினந்தோறும் சந்திப்பான். அதே ஆண்டு பள்ளியின் உடற்பயிற்சிக்கூடத்தில் இருவரும் இருந்தபோது அச்சிறுவனிடம் அந்த ஆடவர் பாலியல் செயலில் ஈடுபடத் தொடங்கினார். அந்த ஆடவர் மரியாதைக்குரிய நிலையில் இருந்ததால், அவரது செயல்களுக்கு எப்படி நடந்துகொள்வது என்பது தெரியாமல் திகைத்த அச்சிறுவன், அந்த ஆடவருக்கு அடங்கி நடந்துகொண்டான். அதையடுத்து பல தருணங்களில் அந்த மாணவன் மீதான துன்புறுத்தல் தொடர்ந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் தம் மீதான பாலியல் தொல்லையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், 2007ல் அந்த ஆடவரின் செயல்களை அச்சிறுவன் எதிர்க்கத் தொடங்கினான். 2015ஆம் ஆண்டில் அந்த ஆடவரின் உறவினர் ஒருவரைச் சந்தித்த பாதிக்கப்பட்ட அந்த நபர், தமக்கு நேர்ந்தது குறித்து அவரிடம் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட அந்த உறவினர், போலிசிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதையடுத்து அதே ஆண்டு நவம்பரில் பாதிக்கப்பட்ட அந்த நபர் போலிசிடம் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பையும் விதிக்கப்பட்ட தண்டனையையும் எதிர்த்து தாம் மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த ஆடவர் தெரிவித்தார். இப்போது அவர் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து அந்த ஆடவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு முன்னதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.