தங்களது சொந்த நிறுவனங்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்பு கொள்கைகளையும் நடைமுறைகளையும் கண்காணித்து அவற்றை மதிப்பிட, 500 தரவுப் பாதுகாப்பு அதிகாரி
களுக்கு அடுத்த ஓராண்டில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் ஓர் அங்கமாக, தனிநபர் தரவு சேகரிப்பு, பயன்பாடு, சேமிப்பு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கண்டறிய சொல்லித் தரப்படும்.
இந்த ஏற்பாட்டுக்கு ஏதுவாக, தரவுப் பாதுகாப்பு தொடர்பான நான்கு பாடங்கள் இம்மாதம் தொடங்கப்படும்.
வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகம், தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் பங்காளித்துவத்துடன் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ‘லேர்னிங் ஹப்’ இந்தப் பாடங்களை நடத்தும்.
பிற்பாடு அறிவிக்கப்படவுள்ள தேதியில் கூடுதலாக 10 பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் பாட வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள நிறுவனங்களும் தனிநபர்களும் சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் இன்று அதற்காக பதிவு செய்துகொள்ளலாம்.
இன்று தொழில் நடத்தப்படும் முறையை தரவு உருமாற்றி வரும் வேளையில், தரவு பாதுகாப்பு குறித்தும் தரவு அத்துமீறலால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் பற்றியும் நிபுணர்கள் அறிந்துகொள்வதற்கான தேவை உள்ளது என்று என்டியுசி ‘லேர்னிங் ஹப்’ தலைமை நிர்வாகி குவெக் கோக் குவோங் கூறினார்.
“தரவுப் பாதுகாப்பு அதிகாரி
களுக்குத் தேவையான பயிற்சியைப் பெற்று அவர்களது திறனை மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்யும் விதமாக இந்த நான்கு பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன,” என்றார் அவர்.
தரவுப் பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி வழங்குவதன் பொருட்டு, சிங்கப்பூர் பட்டயக் கணக்காய்வாளர் கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சட்டப் பயிற்சிக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்
கழக பயிற்சிக் கழகம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் பணியாற்றி வருகிறது.
ஊழியர்களுக்கு வாழ்க்கைத்தொழிலில் புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு வட்டார தரவுப் பாதுகாப்பு மையமாகும் இலக்கை நோக்கி சிங்கப்பூர் செல்லவும் இந்தப் பாடங்கள் உதவும் என்று தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் துணை ஆணையர் இயோங் ஸீ கின் கூறினார்.