ஒவ்வொரு புயலையும் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது சரிவராது என்றாலும் பெருங்கடல்கள் வெப்பமடைந்து வருவதால் புயல்கள் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
“பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை நாம் உணர்கிறோம். பெருங்கடல்கள் வெப்பமடைவதை அடுத்து, புயல்களும் வலுவடையும்,” என்றார் பருவநிலை விஞ்ஞானியான டாக்டர் சியே ஷாங் பிங்.
ஆக அண்மையில், சக்திவாய்ந்ததாகக் கூறப்படும் ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானைப் புரட்டிப் போட்டது. இதனால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. கடந்த மாதம் பஹாமஸ் நாட்டை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய ‘டொரியேன்’ சூறாவளியைத் தொடர்ந்து ‘ஹகிபிஸ்’ புயல் தாக்கியது.பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இரு புயல்களுக்கு இடையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கால இடைவெளி எதுவும் கிடையாது என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானிலை விஞ்ஞானி கோ தியே யோங் கூறினார்.
‘டொரியேன்’ சூறாவளியும் ‘ஹகிபிஸ்’ புயலும் ஒன்றன்பின் ஒன்றாக பூமியின் இருவேறு பகுதிகளில் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தினாலும், பருவநிலை மாற்றத்தால்தான் அவை உருவாகின எனக் கூறிவிட முடியாது என இணைப் பேராசிரியர் கோ குறிப்பிட்டார்.
ஆனால், உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் புயல்காற்றும் தீவிரம் அடையக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பூமியின் இரு துருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோட்டிற்கு (equator) அருகே சிங்கப்பூர் அமைந்துள்ளதால் இங்கு புயல் உருவாவதற்கான சாத்தியம் குறைவு எனவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.