ஜப்பானின் சக்கூரா பூக்களைப் போலத் தோற்றமளிக்கும் சிங்கப்பூரிலுள்ள டிரம்பெட் மரங்களின் இளஞ்சிவப்பு மலர்கள், இந்த மாதம் திடீரென மலர்ந்தன.
பொதுவாகச் சாலையோரங்களில் காணப்படும் இந்த மரங்களின் மலர்கள் செப்டம்பர் மாதத்தின் முடிவுக்குள் மலர்வதை நிறுத்திவிடும். ஆனால் இம்முறை அக்டோபரின் முதல் இரண்டு வாரங்களுக்கும் மரங்கள் தொடர்ந்து பூக்கின்றன. வழக்கத்திற்கு மாறான பருவநிலையே இதற்குக் காரணம் என தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
நீண்ட காலத்திற்குப் பருவநிலை வெப்பமாகவும் வறட்சியாகவும் இருந்து பின்னர் கடும் மழை பெய்யும்போது டபெபுயா ரோசியா என்ற இந்த மரங்களில் பூக்கள் மலரத் தொடங்குவதாகப் பூங்காக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையிலும் ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையிலும் அந்த மரங்கள் மலர்வதாகப் பூங்காக் கழகம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் 15,000 டிரம்பெட் மரங்கள் நட்டுவைக்கப்பட்டுள்ளன. பொங்கோல் பூங்கா, பீஷான்-அங் மோ கியோ பூங்கா மற்றும் சிங்கப்பூர் ரிவர் புரொமனேட் ஆகிய இடங்களில் இந்த மரங்களைப் பொதுமக்கள் காணலாம்.