விருப்பமான உணவு, விடுமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளிலான யதார்த்தமான உரையாடல்கள் தேசிய உரை தொகுப்பில் (என்எஸ்சி) இடம்பெறும். சிங்கப்பூரர்களின் பேச்சுத்தொனியைக் கொண்ட மொத்தம் 1,000 மணி நேரத்திற்கு நீடிக்கும் உரையாடல் பதிவுகள் இதில் இடம்பெறும். இந்தத் தொகுப்பில் முன்னதாகச் சேர்க்கப்பட்டிருந்த மொத்தம் 2,000 மணி நேரப் பதிவுகள் உரை வாசிப்புகளை மட்டுமே கொண்டிருந்தன.
யதார்த்த உரையாடல்களின் சேர்க்கையால் மென்பொருள் மேம்பாட்டாளர்களும் ஆய்வாளர்களும் உருவாக்கும் பேச்சு செயலிகளின் துல்லியம் அதிகரிக்கும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் சிங்கப்பூர் மின்னிலக்க வர்த்தக நாளின்போது தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இதனை அறிவித்தார்.
“சிங்கப்பூரின் மின்னிலக்க உருமாற்றத்தைச் சாத்தியமாக்க தொடர்பு, தகவல் ஊடகம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது மற்ற தொழில்துறைகளின் உருமாற்றத்தை மேலும் முடுக்குகிறது. செயற்கை நுண்ணறிவு, மேக கணினி சேவை போன்றவற்றை ஊக்குவித்து, புதிய வர்த்தக முயற்சிகளும் வர்த்தக கட்டமைப்புகளும் தொடங்க வகைசெய்கிறது,” என்றார் திரு ஈஸ்வரன்.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் தேசிய உரை தொகுப்பு பல முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது.2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் என்எஸ்சி 100 முறைக்ககுமேல் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. உள்ளூர், அனைத்துலக நிறுவனங்கள் மட்டுமின்றி ஆய்வு நிலையங்களும் இதனைப் பயன்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான தொழில்முனைப்பு நிறுவனம் சென்டியன்ட், தேசிய ஒளிபரப்பு நிறுவனமான மீடியாகார்ப் ஆகியவை இதனைப் பயன்படுத்துகின்றன.
தொடர்பு நிலையங்களை ஆராய்வது, மெய்நிகர் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளை உருவாக்குவது போன்றவற்றுக்காக என்எஸ்சி பயன்படுத்தப்படலாம்.
மேக கணினி சேவையைப் பயன்படுத்துவதன் தொடர்பில் தொழில்நுட்ப நிறுவனங்களின் திறன்களையும் தயார்நிலையையும் மதிப்பிடும் புதிய தொழில்நுட்பத் திறன் சார்ந்த சுய மதிப்பீட்டு முறை ஒன்றையும் திரு ஈஸ்வரன் வியாழக்கிழமை அறிவித்தார்.