ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி, சீடார் பெண்கள் பள்ளி, டாவ் நான் பள்ளி உள்ளிட்ட நாற்பது பள்ளிகளில் அடுத்தாண்டு புதிய முதல்வர்கள் அமர்த்தப்படுவர். இது கல்வி அமைச்சின் வருடாந்திர பதவி மாற்ற (reshuffle) நடவடிக்கையில் அங்கம் வகிப்பதாக அமைச்சு தெரிவித்தது.
புதிய கண்ணோட்டங்களால் பள்ளிகள் பயனடைவதுடன் அனுபவமிக்க பள்ளி முதல்வர்களுக்குத் தெரிந்த சிறந்த வழிமுறைகள் பலவற்றை இந்த ஏற்பாட்டின் மூலம் வெவ்வேறு பள்ளிகளுடன் பகிர்ந்துகொள்ள முடிவதாக கல்வியமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட நாற்பது பள்ளிகளில் 21 பள்ளிகளுக்கு முதல் முறையாகப் பணியாற்றும் முதல்வர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.
புதிய முதல்வர்களின் நியமனம், அவர்களது வாழ்க்கைத்தொழிலின் முக்கிய மைல் கல்லைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த கல்வியமைச்சு, இதனால் கல்வித்துறையின் தலைவர்களான அவர்களது பொறுப்புகள் கூடும் என்றது.
நியமனம் செய்யப்பட்ட 40 புதிய முதல்வர்கள், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழா ஒன்றில் கல்வியமைச்சின் தலைமைச் செயலாளர் வோங் சியூ ஹொங்கிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெறுவர். ஓய்வுபெறும் பள்ளி முதல்வர்கள், மூத்த கல்வி அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் அந்நிகழ்ச்சியில் கல்வியமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.