சிங்கப்பூருக்குள் 1.18 மில்லியன் வெள்ளி ரொக்கத்தைக் கடத்திய 37 வயது ஆடவருக்கு 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் இன்று தெரிவித்தனர்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியன்று, எல்வின் லீ காய் வூ, துவாஸ் சோதனைச் சாவடிக்குள் 300,000 வெள்ளியைக் கள்ளத்தனமாகக் கொண்டுவர முயன்றதாக போலிசார் தெரிவித்தனர்.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரை ஒட்டி சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது வழக்கமான சோதனைக்காக அவர் நிறுத்தப்பட்டார். மலேசியரான லீ தன்னிடம் இருந்த அந்தப் பணத்தைப் பற்றி தன்னைச் சோதனை செய்யவந்த அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.
உடனே விசாரணை நடத்திய அதிகாரிகள், காரின் பின்னிருக்கையில் மடிக்கணினிப் பையைக் கண்டனர். அதற்குள் இருந்த சிறிய ஊதா நிற பைக்குள் ஒளிக்கப்பட்டிருந்த 300,000 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முந்நூறு 1,000 வெள்ளி நோட்டுகள் அந்தப் பைக்குள் இருந்தன.

