பெண்களை ஆபாசமாகச் சித்தி ரிக்கும், அனுமதியின்றி திரட்டப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைப் பகிர்வதாகக் கூறப்படும் மற்றொரு தனியார் உரையாடல் குழு ஒன்று ‘டெலிகிராம்’ தளத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஷெரிங்இஸ்கேயாரிங்’ என்ற அந்த தனியார் உரையாடல் குழு குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
எம்ஆர்டி போன்ற பொது இடங்களில் பெண்கள், சிறுமிகளின் படங்களை பயனாளர்கள் பகிர்வதாக ஏஷியாஒன் இணையத்தளம் சென்ற வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
அந்தக் குழுவில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் பகிரும் படங்களில் சிறுமிகள், பள்ளிச் சீருடையில் உள்ள மாணவிகளின் படங்களும் அடங்கும். அந்தக் குழு ஆபாசமான தகவல்களையும் பகிர்ந்து வந்துள்ளதாக டெலிகிராம் தளத்தின் பயனாளர்களில் ஒருவர் ஏஷியாஒன்னிடம் கூறினார்.
கிட்டத்தட்ட 5,000 புகைப்படங்கள், 800 காணொளிகள் அந்தக் குழுவில் பகிரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
டெலிகிராமில் ஆபாசமான தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இரு பதின்ம வயதினர் உட்பட, நால்வர் மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
‘எஸ்ஜி நாசி லெமாக்’ என்ற குழு மூலம் டெலிகிராம் தளத்தில் ஆபாசமான தகவல்களைப் பகிர்ந்தது, விபசார நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தியது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் போலிஸ் தெரிவித்தது.
ஆபாசப் படைப்புகளைப் பரப்புவது குற்றம் என தெரிவித்த போலிசார், இத்தகைய குற்றச்செயலைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு ஊக்குவித்துள்ளனர்.
தகவல் தெரிவிக்க பொதுமக்கள் 1800-2550000 எனும் எண்ணில் போலிசுடன் தொடர்புகொள்ளலாம். மின்னணுவியல் தொழில்நுட்பம் வழி ஆபாசப் படைப்புகளை அனுப்புவோருக்கு மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.