மளிகைப் பொருள்கள், சமைத்த உணவுகள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்தும் வகையில், ஃபேர்பிரைஸ், ஃபூட்ஃபேர், கோப்பிதியாம் ஆகிய மூன்று கூட்டுறவு அமைப்புகளும் புதிய என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இம்மாதத் தொடக்கத்தில் என்டியுசி என்டர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்ற ஃபேர்பிரைஸின் தலைமை நிர்வாகி சியா கியன் பெங், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்விவரத்தை அறிவித்தார். செயலாற்றலை மேம்படுத்துவதும் பயனீட்டாளர்களின் மாறிவரும் உணவுத் தேவைகளை நிறைவேற்றுவதும் இதன் நோக்கம் என்றார் அவர்.
ஃபேர்பிரைஸ் குழுமம் பல்வேறு திட்டப்பணிகளை வகுத்து வருவதாகவும், விவரங்கள் பின்னொரு தேதியில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகமானோர் இப்போது கடை உணவைச் சாப்பிடுவதாக மரீன் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சியா சுட்டிக்காட்டினார். மக்கள் உட்கொள்ளும் சாப்பாடுகளில் 60 விழுக்காட்டுக்கும் மேலானவை கடையிலிருந்து வாங்கிச்செல்லும் உணவாகவும், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் உணவாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டின் மாதச் செலவிலும் கால்பகுதிக்கும் மேலாகச் சராசரியாக $1,199 உணவுக்குச் செலவிடப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இது 25 விழுக்காடு அதிகம்.
இந்நிலையில், மூன்று பிரிவுகளையும் ஒருங்கிணைப்பதன்வழி, வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க மேலும் சிறந்த தீர்வுகள் வகுக்கப்படும் என்றார் திரு சியா.
புதிய குழுமத்தின்கீழ் மொத்தம் 573 பேரங்காடிகள், உணவங்காடி நிலையங்கள், உணவு நிலையங்கள், காப்பிக் கடைகள், மருந்து கடைகள், பலசரக்குக் கடைகள் இருக்கும்.
ஃபேர்பிரைஸ் குழுமம் என்டியுசி என்டர்பிரைஸின்கீழ் தொடர்ந்து இடம்பெறும்.