சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தீமிதித் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் ஒருவர் பூக்குழியில் விழுந்ததாகவும் அவர் கோயில் தொண்டூழியர்களால் மீட்கப்பட்டு உடனடியாக சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயமும் நேற்று கூட்டாகத் தெரிவித்தன.
கோயில் நிர்வாகத்தினர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவரைப் பார்த்ததாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரை மீட்கும் பணியில் உதவிய இரண்டு தொண்டூழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைபெற்று வருகின்றனர். நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாக அறிக்கை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

