அப்பர் புக்கிட் தீமா சாலையில் ஒரு காரை காட்டுப்பன்றி ஒன்று திடீரென முட்டி, வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்தச் சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு நடந்தது. சம்பவத்தின்போது அந்த வெள்ளை நிறக் காருக்குள் இருந்த மிஷேல் என்பவர், இது குறித்து ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.
நான்கு தடங்களைக் கடந்து சென்ற அந்தப் பன்றி, தங்களது காரை மிகவும் வேகமாக மோதியதாக அவர் தெரிவித்தார்.
“காரை முட்டிய அந்தக் காட்டுப்பன்றி உடனே கீழே விழுந்தபோதும் இரண்டு வினாடிகளுக்குப் பிறகு அது எழுந்து நின்று மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது,” என்றார் மிஷேல்.
காரின் முன்பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டதை இந்தச் சம்பவத்தைக் காட்டும் சில படங்கள் காட்டுகின்றன. சேதமடைந்த அந்தக் காரைப் பழுதுபார்ப்பதற்கு 1,241 வெள்ளி செலவானதாக மிஷேல் கூறினார். இதுபோன்ற ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டுமென தாம் விரும்புவதாக மிஷேல் தெரிவித்தார். “காருக்குப் பதிலாக இந்தப் பன்றி, பாதசாரியையோ அல்லது மோட்டார் சைக்கிளோட்டியையோ மோதியிருந்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும்,” என்றும் அவர் கூறினார்.