தீபாவளி இரவன்று சட்டவிரோதமாக வாணவெடிகள் வெடிக்கப்பட்டதன் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாணவெடிகள் வெடிப்பதைக் காட்டும் 23 வினாடி காணொளி ஒன்று, நேற்று காலை ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அக்காணொளி, ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள இரு புளோக்குகளின் இடையே வாணவெடிகள் வெடிப்பதாகவும் அதை அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பார்ப்பதாகவும் அமைந்துள்ளது.
ஒரு கட்டத்தில் வெடிக்கச் செய்த வாணவெடி, 12வது மாடி உயரம்வரை சென்றதாகவும் புளோக்கின் வெளிச்சுவரை உரசிவிட்டு மீண்டும் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால் இவ்வாறு சட்டவிரோதமாக வாணவெடிகள் வெடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது $2,000க்கும் $10,000க்கும் இடைப்பட்ட அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
பதிவேற்றம் செய்யப்பட்ட இன்னொரு காணொளியில், புளோக்கு களின் முன்னால் உள்ள ஒரு திறந்த வெளியில் வாணவெடிகள் வெடிக்கப்பட்டன. இரண்டும் ஒரே சம்பவத்திற்கு உரியவையா என்பதில் தெளிவில்லை.
வாணவேடிக்கைகளை ரசிப்பதாக ஒரு சாராரும் வாணவேடிக்கைகளால் ஏற்படக்கூடிய தீ அபாயம் குறித்து மறு சாராரும் இணையத்தில் தங்கள் கருத்தைக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே வாணவெடிகளை வைத்திருப்பது, விற்பது, விநியோகம் செய்வது, இறக்குமதி செய்வது யாவும் சட்டப்படி குற்றம் என்று போலிஸ் அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.