அங் மோ கியோ அவென்யூ 10ல் அமைந்துள்ள புளோக் 446ல் வீடு ஒன்றில் இன்று (அக்டோபர் 29) காலை தீப்பற்றியதையடுத்து சுமார் 40 பேர் அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் புகைப்படங்களுடன் இந்தச் சம்பவம் பற்றி ஹெலென் என்பவர் ஸ்டோம்ப் இணையப்பக்கத்துக்குத் தெரிவித்தார்.
நான்காவது மாடி தாழ்வாரக் கூரை, சுவர்களில் கரும்புகை படிந்திருந்ததையும் அந்தப் படங்கள் காட்டின.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனமும் அவசர சிகிச்சை வாகனமும் இருந்ததாக ஹெலென் குறிப்பிட்டார்.
அந்த புளோக்கின் நான்காவது மாடியில் இருக்கும் வீடு ஒன்றில் தீப்பற்றிய தகவல் காலை 9.06 மணிக்குக் கிடைத்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சமையலறைப் பொருட்களின் தொடர்பில் ஏற்பட்ட தீயை இரண்டு குழாய்களில் தண்ணீர் பீய்ச்சியடித்து அணைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை; விசாரணை தொடர்கிறது.