சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவை 2030ஆம் ஆண்டிற்குள் ஏழு மடங்கிற்கும் மேல் உயர்த்த, அதாவது இப்போது 260 மெகாவாட்டாக இருப்பதை 2 கிகாவாட்டாக உயர்த்த சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. இது 350,000 வீடுகளின் ஓராண்டு மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதாவது, சிங்கப்பூரின் இன்றைய மொத்த மின்சக்தித் தேவையில் நான்கு விழுக்காடாக இருக்கும். இப்போதைக்கு, நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தித் தேவையில் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சக்தியின் பங்கு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது.
படிம எரிபொருள்களின் தூய வடிவமான இயற்கை எரிவாயுவே நாட்டின் 95 விழுக்காட்டிற்கும் அதிகமான எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்கிறது. எஞ்சிய விழுக்காடு, கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவை மூலம் பெறப்படுகிறது. ஆயினும், தண்ணீர்த் தொழில்நுட்பத்தில் சவால்களைச் சமாளித்து எப்படி வளர்ச்சி கண்டோமோ, அதேபோல எரிசக்தித் துறையிலும் நாடு சவால்களைக் கடந்து முன்னேற்றம் காணும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
மரீனா பே சாண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நேற்று தொடங்கிய சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் சான் இந்த விவரங்களைத் தெரிவித்தார். இப்போது, நாட்டின் எரிசக்தித் தேவைக்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் இயற்கை எரிவாயுவை சிங்கப்பூர் திரவ வடிவில் இறக்குமதி செய்து வருகிறது. அடுத்ததாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகரிக்கப்படும் என்றார் திரு சான்.
2030க்குள் சூரிய சக்தி மூலம் 2 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்ற இலக்கை அடைய அரசாங்கம் சில வழிகளை ஆராய்ந்து வருகிறது. முதலாவதாக, கட்டடங்களின் கூரைப்பகுதி, நீர்த்தேக்கங்கள், கடல்பரப்பு, கட்டடங்களின் செங்குத்துப் பரப்பு ஆகியவற்றில் அதிக அளவில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படும். சிங்கப்பூர் நிலப்பரப்பில் மூன்றில் இரு பங்கு எப்படி நீர்ப்பிடிப்புப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதோ, அதே போன்ற அணுகுமுறை சூரிய சக்தித் துறையிலும் கையாளப்படும் என்று திரு சான் சொன்னார்.
2020ஆம் ஆண்டிற்குள் வீவக புளோக்குகளில் இரண்டில் ஒன்றின் கூரைப்பகுதியில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். அத்துடன், 30 பள்ளிகளிலும் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான 13 இடங்களிலும் சூரிய சக்தித் தகடுகள் நிறுவப்படும்.
தொழில் மேம்பாட்டு நிறுவனமான ‘ஜேடிசி’, நடமாடும் சூரிய சக்தித் தகடுகளையும் காலி இடங்களில் துணைமின் நிலையங்களையும் ஏற்படுத்தும்.இதனிடையே, எரிசக்தி சேமிப்பு தொடர்பான ஆய்வு, உருவாக்கப் பணிகளிலும் சிங்கப்பூர் அதிக முதலீடு செய்யும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.