இல்லப் பணிப்பெண்ணைக் கழிவறையில் படமெடுத்தது மட்டுமல்லாமல் அவரை மானபங்கப்படுத்திய முதலாளியான யாவ் டெர்ங் புன்னுக்கு நேற்று 15 மாதம், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. யாவ்வின் துன்புறுத்தலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் 2017ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அப்பணிப்பெண், மலேசியரான அந்த 56 வயது ஆடவரின் வீட்டைவிட்டு தப்பிச் சென்று விட்டார். அடுத்த நாளன்று மனிதவள அமைச்சிடம் அவர் புகார் அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் காரணத்தால் அந்த 41 வயது பணிப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. சிங்கப்பூர் நிரந்தரவாசியான யாவ், அப்பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகளையும் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டையும் முன்னதாக ஒப்புக்கொண்டார். 2017ஆம் ஆண்டு ஜனவரியில், திருமணமான யாவ்வின் வீட்டில் அந்தப் பணிப்பெண் பணியாற்ற தொடங்கினார். அப்பணிப்பெண் கழிவறையில் இருந்தபோது கைபேசியில் அவரைப் படம் எடுத்த சாவ் எச்சரிக்கப்பட்ட போதும் அவரது துன்புறுத்தல் தொடரவே அப்பணிப்பெண் அதிகாரிகளிடம் புகாரளித்தார்.