பாசிர் ரிஸ், பொங்கோல் வட்டாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இவ்விரு வட்டாரங்களுக்கும் இடையே இன்னும் சுலபமாகப் பயணம் செய்ய முடியும். இந்த வட்டாரங்களை இணைக்கும் புதிய சாலை ஒன்று நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குப் பொதுமக்களுக்குத் திறக்கப்படுகிறது.
தெம்பனீஸ் விரைவுச்சாலையிலுள்ள போக்குவரத்தைச் சீராக்க இந்தப் புதிய சாலை உதவும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. காலாங்-பாய லேபார் விரைவுச்சாலைக்கும் (கேபிஇ) தெம்பனீஸ் விரைவுச்சாலைக்கும் (டிபிஇ) இடையிலான சாலை இணைப்புகளின் விரிவாக்கத்தில் புதிய சாலை அங்கம் வகிக்கிறது.
இந்த இணைப்புகளின் விரிவாக்கத்திற்கான வசதியை ஏற்படுத்த, டிபிஇயை நோக்கிச் செல்லும் கேபிஇ முதல் எஸ்எல்இ நோக்கிச் செல்லும் டிபிஇ வரையிலான துணைச்சாலையின் பயன்பாடு நவம்பர் 9ஆம் தேதி காலை 5 மணிக்கு நிறுத்தப்படும்.
காலை 5 மணிக்குப் பிறகு வாகனமோட்டி வெளிவழி 9சி-யில் முன்கூட்டியே வெளியேறி, எஸ்எல்இ நோக்கிச் செல்லும் டிபிஇக்குச் செல்லும் புதிய துணைச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

